ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் அறுந்து கிடக்கும் மின் ஒயரால் அச்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, இந்திரா காந்தி சாலை, ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு வழியாக அரக்கோணம், திருப்பதி, சென்னை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.

ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு மின் கம்பத்தில் இருந்து,வீடு மற்றும் கடைக்கு செல்லும் மின் இணைப்பு ஒயர் அறுந்து விழுந்துள்ளது. இந்த மின் ஒயர், ஒலிமுகமதுபேட்டை பகுதிக்கு செல்லும் வளைவில், தானியங்கி சிக்னல் கம்பத்தின் மீது விழுந்துள்ளது.

மின் இணைப்பு ஒயரில் மின் சப்ளை இல்லை. இருப்பினும், சிக்னல் கம்பத்தில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மின் ஒயர் ஆபத்தாக உள்ளது.

சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், நேற்று வரை அகற்றவில்லை. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும் மின் ஒயர் மீது மின் சப்ளை இருக்குமோ என, அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது.

இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கழுத்தில் மின் ஒயர் சிக்கி விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

எனவே, இனி வரும் மழைக்காலங்களில் மின் கம்பத்தில் இருந்து, மின் ஒயர் அறுபட்டு விழுந்தால், உடனடியாக அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement