ஜெய்சங்கரை கை குலுக்கி வரவேற்ற பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

2

இஸ்லாமாபாத்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை கைகுலுக்கி வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
பிரதமருக்கு பதிலாக மத்திய வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சரே கடந்த காலங்களில் பங்கேற்று இருந்தனர். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்று இருந்தார்.


இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இதையடுத்து பாகிஸ்தான் சென்ற ஜெய்சங்கருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். ஜெய்சங்கரை கை குலுக்கி வரவேற்றார் ஷெபாஸ் ஷெரீப். இன்றும், நாளையும் பாகிஸ்தானில் தங்கியிருக்க உள்ளார் ஜெய்சங்கர் .

இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பின் இந்திய வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.

Advertisement