ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரியிடம் ரூ. 59 லட்சம் 'சுருட்டிய' மோசடி நபர்கள் 

கோவை; ஓய்வு பி.எஸ்.என்.எல்., அதிகாரியிடம், சி.பி.ஐ., அதிகாரி போல் பேசி, ரூ. 59 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, ராமநாதபுரம், ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழினிசாமி, 76; பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற பொறியாளர். இவரது மொபைல் எண்ணுக்கு, கடந்த ஆண்டு, ஜனவரியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை சி.பி.ஐ., சிறப்பு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார்.

மேலும் அவர், பழனிசாமி பெயரை பயன்படுத்தி சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும், இதனால் அவர் மீது அந்தேரி போலீஸ் ஸ்டேஷனில், எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பழனிசாமியின் வங்கி கணக்கு எண், கணக்கில் உள்ள பணம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

இதன் பின், 'வங்கியில் இருக்கும் பணத்தை ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வு செய்த பிறகு பணத்தை திருப்பி அனுப்பி விடுவதாக' தெரிவித்துள்ளார். பழனிசாமியை மிரட்டி, உடனே பணத்தை அனுப்புமாறு கூறினார்.

இதையடுத்து, மோசடி நபர் கொடுத்த மூன்று வங்கி கணக்குகளுக்கு, ரூ. 59.40 லட்சம் பணத்தை பழனிசாமி அனுப்பினார். அதன் பின், பழனிசாமியால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆகவே, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். ோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement