துணை தாசில்தாரின் லஞ்ச பணம் 'மிஸ்ஸிங்' ; சமூக வலைதள பதிவால் வந்தது பிரச்னை விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
திருப்பூர்; ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், லஞ்ச பணம் காணாமல் போனதாக வெளியான,'வாட்ஸ் ஆப்' தகவல் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடக்குமென கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்தனர்.
அதன் விவரம்:
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகாவில் லஞ்சம் அதிகரித்துவிட்டதாக ஏற்கனவே புகார் அளித்திருந்தோம். தலைமையிடத்துதனி துணை தாசில்தார் மறைத்து வைத்த லஞ்ச பணம் காணாமல் போனதால், மற்ற அலுவலர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பணம் காணாமல் போய்விட்டதாக, தகராறு நடந்துள்ளது. தேடியதில் கிடைத்து விட்டது. இதுதொடர்பாக, 'வாட்ஸ் ஆப்'களில் தகவல் வெளியாகி வருகிறது. மாவட்ட நிர்வாகத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும், இதுபோன்ற அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் புகார் அளித்தனர்.இந்த விவகாரம் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''ஊத்துக்குளி தாலுகாவில் நடந்தது தொடர்பான, சமூக வலைதள தகவல் பகிர்வு குறித்து விசாரிக்கப்படும். தலைமையிடத்து துணை தாசில்தாரின் லஞ்ச பணம் காணவில்லை' என்று தகவல் பகிர்வு நடந்துள்ளது.
திருப்பூர் ஆர்.டி.ஓ., உடனே விசாரித்து, மேல்நடவடிக்கை எடுப்பார். பணியாளர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சட்டரீதியான விசாரணை நடத்தப்படும். அதன்மீது, உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்,'' என்றார்.இதனை கேட்ட விவசாயிகள் கைதட்டி, கலெக்டரின் அறிவிப்பை வரவேற்றனர்.