சேதமடைந்த மின்கம்பத்தால் நயினார்குப்பத்தில் விபத்து அபாயம்
செய்யூர், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு கடப்பாக்கம் துணை மின்பகிர்வு மனை மூலமாக மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நயினார்குப்பம், காளியம்மன் கோவில் அருகே குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்ய சாலை ஓரம் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் பழுதடைந்து, சிமென்ட் கலவைகள் உதிர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்து எலும்பு கூடுபோல காட்சியளிக்கிறது.
இதனால் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.