திடக்கழிவு மேலாண்மை பணியில் அலட்சியம்
மக்களின் அடிப்படை தேவைகளாக குடிநீர், கழிப்பறை, சாக்கடை , சுகாதாரமான சூழல் உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் கழிவுகளை தெருக்களில் வீசுவதால் சுகாதாரம் சார்ந்த பல பிரச்னைகள் உருவாகிறது.
இதில் பாதிப்பை தவிர்க்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நடைமுறை சிக்கல்களை காரணம் கூறி இதனை முறையாக செயல்படுத்துவதில் அலட்சியம் நீடிக்கிறது. ஆரம்ப காலத்தில் மக்கும், மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வலியுறுத்தப்பட்டது.
இதற்காக உர தயாரிப்பிற்கு பயன்படுத்த ஏதுவாக இத்திட்டத்தில் பல லட்சம் ரூபாயில் குப்பைத்தொட்டிகள் விலைக்கு வாங்கப்பட்டன.
அடுத்த சில நாட்களிலே இவற்றின் பயன்பாடு முடங்கின. தற்போது இத்தொட்டிகள் பயன்பாடின்றி குப்பையோடு குப்பையாக மட்க துவங்கி உள்ளன. துாய்மை காவலர்கள், கழிவுகளை சேகரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். பல இடங்களில் கழிவு அகற்றப்படாமல் குப்பை கழிவுகளில் மூழ்கி கிடக்கின்றன.
சிலர் குப்பை தொட்டியிலே கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர். பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட குப்பை தரம் பிரித்தல் மண்புழு உர உற்பத்தி கிடங்குகள் பாழடைந்துள்ளன.
மழைக்காலம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் சுகாதாரம் காக்கவேண்டிய திறந்த வெளி குப்பை தொட்டிகள், தரம் பிரித்தல் தொட்டிகள், தற்போது தொற்று நோய் பரப்பும் மையங்களாக மாறி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் விதத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.