ஜனாதிபதி பற்றி சோனியா தவறான கருத்து; பீஹார் கோர்ட்டில் வழக்கு

13


பாட்னா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பீஹாரில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.



பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடிந்ததும் வெளியில் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவிடம், ஜனாதிபதி உரை குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், “ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் படித்ததால், பாவம் உரையின் இறுதியில் ஜனாதிபதி சோர்வாக காணப்பட்டார்,” என்றார்.


சோனியா அருகில் இருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதை குறிக்கும் வகையில், 'நோ கமென்ட்ஸ்' என கூறினார். இந்நிலையில், சோனியாவின் இந்த கருத்துக்கு ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மற்றும் பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதற்கு, 'ஜனாதிபதி உரை நிகழ்த்தியபோது எந்த இடத்திலும் சோர்வடையவில்லை. உண்மையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்காக உரையாற்றுவது சோர்வை உண்டாக்காது' என ஜனாதிபதி மாளிகை விளக்கம் அளித்து இருந்தது.


இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பீஹாரில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா, சோனியாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய கோரி புகார் அளித்தார்.



பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், 'இது நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரிக்கு அவமரியாதை. ராகுல் மற்றும் பிரியங்கா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சோனியா கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும், என்றார்.

Advertisement