அண்ணா பல்கலை. வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; இ.பி.எஸ். வலியுறுத்தல்
சென்னை; சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகின்றன.
பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசை திருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.
உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது.
யார் அந்த SIR என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற, முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்.
யார் அந்த SIR என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBIக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.