அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்.10ல் தர்ணா

விருதுநகர்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பிப். 10ல் அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேரம் தர்ணா நடத்துகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும், அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என பல்வேறு கோரிக்கைகள் தி.மு.க., தரப்பில் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.

ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளை கடந்தும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி ஒவ்வொரு துறை ஊழியர் சங்கத்தினரும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா கூறியதாவது:

சி.பி.எஸ்., திட்டம் ரத்து, அரசு துறைகளில் உள்ள 4 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவின்படி பணிக்காலமாக முறைப்படுத்து வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.10ல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் 24 மணி நேர தர்ணா நடத்தப்படவுள்ளது என்றார்.

Advertisement