இது அராஜகத்தின் உச்சம்... முருக பக்தர்களை ஒடுக்க 144 தடை உத்தரவு; தி.மு.க., அரசுக்கு வானதி கடும் கண்டனம்
கோவை: 'முருக பக்தர்களை ஒடுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, காட்டாட்சி என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' என்று கோவை தெற்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழர்களின் உணர்வோடு, வாழ்வியலோடு இரண்டற கலந்து விட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். இங்கு ஒரு தர்கா இருப்பதை காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் முருகன் கோயிலை சீர்குலைக்கவும். திருப்பரங்குன்றம் மலைக்கு சொந்தம் கொண்டாடி, ஆக்கிர்மிக்கும் உள்நோக்கத்தில் சில சக்திகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் சென்று. அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது அத்துமீறலில் ஈடுபட்டார். இதை பாஜக உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியும் தி.மு.க., அரசு மெளனமாக வேடிக்கை பார்த்து வருகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும். குழப்பத்தை விளைவித்து, அமைதியை கெடுக்க நினைக்கும் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் இந்து அமைப்புகள் இன்று போராட்டம் அறிவித்தன. ஆனால், அமைதியை கெடுக்க அராஜகத்தில் ஈடுபட்ட அடிப்படைவாதிகளை வேடிக்கை பார்த்த தி.மு.க., அரசு, முருகனின் அறுபடை வீட்டை காப்பாற்ற போராடும் இந்து அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஏதோ அந்நிய நாட்டு சக்திகளை ஒடுக்குவது போல மண்ணின் மைந்தர்களை ஒடுக்க. காவல்துறையை ஆயிரக்கணக்கில் ஏவி விட்டுள்ளது தி.மு.க., அரசு. அமைதி வழியில் போராடும் பலரை கைது செய்து வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க., அரசும், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும், தனது அராஜகத்தை கைவிட்டு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின்படி இந்து அமைப்புகள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் முருகனும், முருக பக்தர்களும் தி.மு.க., அரசை தண்டிப்பார்கள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.