டில்லி தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை பா.ஜ. கைப்பற்றும்; அண்ணாமலை நம்பிக்கை

4

புதுடில்லி; புதுடில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


@1brதலைநகர் டில்லியில் அவர் அளித்த பேட்டி விவரம்;


பா.ஜ.,வில் உழைப்பவர்கள் எல்லாம் பதவியை எதிர்பார்த்து உழைப்பது இல்லை. தேசத்துக்காக வேலை பார்ப்பவர்கள். 70 தொகுதிகள் டில்லியில் உள்ளது. லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இரண்டும் கூட்டணியில் இருந்த போதே நாங்கள் ஜெயித்திருக்கிறோம். 7 எம்.பி.,க்களை மக்கள் தந்துள்ளனர்.


இப்போது அப்படி இல்லை. அந்த கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை. இம்முறை மெஜாரிட்டிக்கு தேவையான தொகுதிகளை வெல்வோம். ஒரு பெரிய அளவிலான வெற்றியை பா.ஜ., பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


தாம் நிற்கும் தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நல்லது எதையும் கெஜ்ரிவால் 3 நாட்களாக பேசாமல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறிக் கொண்டுள்ளார்.


எப்போதும் தேர்தல் காலங்களில் முன்னே இருக்கும் அவர் சொந்த தொகுதியில் பின்தங்கி இருக்கிறார். அவரை தற்காத்துக் கொள்ளவே பா.ஜ., பணம் கொடுப்பதாக கூறி வருகிறார்.


திருப்பரங்குன்றத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களை தி.மு.க., அரசு முறைப்படுத்த வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும். இப்போது தற்காலிகமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, அணையில் இருந்து வரக்கூடிய வெள்ளத்தை இரண்டு இரும்பு கேட்கள் கொண்டு தடுப்பதை போன்றது. ஒருநாள் நிச்சயம் வெடிக்கும்.வேண்டும் என்று மக்களை தூண்டுவதற்காகவே தி.மு.க., அரசாங்கம் இப்படி செய்கிறது.


இன்று (பிப்.3) காலை முதல் பா.ஜ., தலைவர்களை,தொண்டர்களை வீட்டிற்கே சென்று கைது செய்துள்ளனர். இ.சி.ஆர்., சம்பவத்தில் பல குற்றவாளிகள் இருக்கும் போது, இந்த ஒரு குற்றவாளி சினிமா ஹீரோ மாதிரி பேசும் வீடியோ மட்டும் எப்படி வெளி வருகிறது? அந்த வீடியோவில் எனக்கு நம்பிக்கை இல்லை.


காவல்துறை கஸ்டடியில் இருப்பவரை வீடியோ பதிவு செய்தது யார்? அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் அல்லவா? வேங்கைவயல் சம்பவத்தில் திடீரென 4 பேர் குற்றவாளிகளாக வருகின்றனர். ஆடியோ, வீடியோ வெளி வருகிறது.


இன்றைக்கு தி.மு.க., அவர்களின் அதிகாரத்தை எப்படி பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எப்படி கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுதினாரோ அதே போன்று தி.மு.க.,வும் இன்றைக்கு கதை, வசனம் எழுதி மாற்ற ஆரம்பித்துவிட்டது. இது பேராபத்தில் முடியும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement