திருப்பரங்குன்றத்தில் இன்று அறப்போராட்டம்; 144 தடை உத்தரவு

1

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, ஹிந்து முன்னணி சார்பில் இன்று அறப்போராட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை கலெக்டர் சங்கீதா பிறப்பித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. இங்கு, வழிபட தடை இல்லாத நிலையில் தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.


இது தொடர்பாக சில முஸ்லிம் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. மலையின் புனிதத்தை காக்க கோரி ஹிந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.


இதற்கிடையே, ஹிந்து முன்னணி அறப்போராட்டத்தில் தென் மாவட்ட ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்காத வகையில் அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வந்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், கைதும் செய்யப்படுவர் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


இதனால், முருக பக்தர்கள் பலர் மதுரை மாவட்ட எல்லை வரை வாகனங்களில் வந்து பாத யாத்திரையாக திருப்பரங்குன்றத்திற்கு வர திட்டமிட்டுள்ளனர்.


மலையைச் சுற்றி, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்து எஸ்.பி.,க்கள், மூன்று ஏ.டி.எஸ்.பி.,க்கள், 13 டி.எஸ்.பி.,க்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் தலைமையில், 3,000 போலீசார் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர்.



அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.தனபால் முன்னிலையில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜராகி முறையிட்டதாவது: திருப்பரங்குன்றம் கந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற மற்றும் மலையில் ஆடு, கோழி பலியிட முயற்சிப்பதை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கோரினார்.நீதிபதி: அவசர வழக்காக விசாரிக்க இயலாது. இன்று வழக்கம் போல விசாரிக்கப்படும்.

Advertisement