பணம் பறித்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐ.,க்கு ஜாமின்
சென்னை: தனியார் ஊழியரை காரில் கடத்தி, பணம் பறித்த வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ., மற்றும் வருமான வரி அதிகாரிகள் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை, கடந்தாண்டு டிசம்பரில் கத்திமுனையில் கடத்தி, 20 லட்சம் ரூபாய் பறித்ததாக, திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்.ஐ., ராஜாசிங், வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் உள்ளவர்களின் ஜாமின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜாசிங் உட்பட நான்கு பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி சுந்தர்மோகன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.விவேகானந்தன் மற்றும் எஸ்.சீனுவாசன் ஆஜராகி, 'வழக்கின் விசாரணை நிறைவு பெற்று விட்டது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும், 47 நாட்களாக சிறையில் உள்ளனர். இதை கருத்தில் கொள்ள வேண்டும்,' என்றனர்.
புகார்தாரர் முகமது கவுஸ் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.வினோத் ஆஜராகி, ''வழிப்பறி செய்யப்பட்ட பணம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை,'' என தெரிவித்தார்.
இதையடுத்து, நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கிய நீதிபதி, வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை, விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.