டிரைவர் கழுத்தறுத்து கொலை மூன்று பேர் சிக்கினர்

சேலம் : சேலம் அருகே, கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வேன் டிரைவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சேலம் அருகே, வீராணம், வீமானுார் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். 29. ஆறு ஆண்டுகளுக்கு முன், மணிமேகலை என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரிந்து வாழ்ந்தனர்.


குமரவேல் சரக்கு வேன் டிரைவர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட் அருகே, பூக்களை ஏற்றி வரும் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தார்.


இந்நிலையில், வீராணம், துளசி மணியனுாரை சேர்ந்த பிரகாஷ், 38, என்பவருக்கும், அந்த பெண்ணுடன் தொடர்பு இருந்தது. குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த பிரகாஷ், சில நாட்களுக்கு முன் ஜாமினில் வந்தார்.


தன் காதலியுடன் குமரவேல் நெருங்கி பழகி வந்ததை அறிந்த பிரகாஷ், அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, குமரவேலுவை தாக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பினர்.


வீராணம் போலீசார் விசாரித்து பிரகாஷ், அவரது நண்பர்கள் மாணிக்கம், 32, கனகராஜ், 34, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


கைதான பிரகாஷ் மீது, போதை பொருள் விற்பனை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் உள்ளார். குண்டர் சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.

Advertisement