கோவையில் தி.மு.க.,வினர் குறுக்கீடு; பயனாளிகளுக்கு வீடு வழங்குதல் நிறுத்தம்
கோவை : கோவையில், துாய்மை பணியாளர்களுக்காக இரு இடங்களில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, மூன்று மாதங்களாகி விட்டது. தி.மு.க.,வினர் குறுக்கீட்டால், பயனாளிகளுக்கு ஒதுக்க முடியாமல், நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை, உக்கடம் சி.எம்.சி., காலனியில், 520, வெரைட்டி ஹால் ரோட்டில், 432 துாய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்தனர்.
புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக கூறப்பட்டது. அவர்களது வீடுகளை காலி செய்ய வைத்து, இடித்து தரைமட்டமாக்கி விட்டு, தற்காலிகமாக தகர கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர்.
முதல்கட்டமாக, உக்கடத்தில், 222 வீடுகள், வெரைட்டி ஹால் ரோட்டில், 192 வீடுகள் மட்டும் கட்டப்பட்டன. இவற்றை, கடந்தாண்டு அக்., 31ல் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மூன்று மாதமாகியும் இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
தற்காலிக தகர கொட்டகையில் வசிப்போர் சார்பில், பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து, முறையிட்டனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தி.மு.க.,வை சேர்ந்த துாய்மை பணியாளர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு வீடு ஒதுக்கிய பின் எஞ்சியவற்றை மற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கூறி, அரசு அதிகாரிகளுக்கு தி.மு.க., நிர்வாகிகள் அழுத்தம் கொடுக்கின்றனர்.
அதனால், மூன்று மாதமாகியும் இன்னும் பயனாளிகளுக்கு ஒதுக்காமல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிறுத்தி வைத்திருக்கிறது என கூறப்படுகிறது.