திருப்பரங்குன்றம் செல்லவிடாமல் எச்.ராஜாவை தடுத்த போலீசார்
காரைக்குடி:காரைக்குடி அருகே உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். காரில் அமர்ந்து டிஎஸ்பியிடம் எச்.ராஜா வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை மீட்க போவதாக கூறி பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தெரிவித்ததை அடுத்து காவல் மாவட்ட நிர்வாகம் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் மதுரை, திருப்பரங்குன்றம் செல்லும் வானங்கள் சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும் நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அழகாபுரியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா திருப்பரங்குன்றம் செல்ல தனது காரில் புறப்பட்டார். அப்போது காத்திருந்த மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், வெளியில் செல்ல அனுமதி மறுத்ததால் அவருடன் எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து எச்.ராஜா காரிலேயே நீண்ட நேரம் காத்திருந்தார்.