குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா வரைவு குழு அமைப்பு
ஆமதாபாத்: பொது சிவில் சட்ட தேவையை மதிப்பீடு செய்து, அதற்கான மசோதாவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது.
நாட்டில் தற்போது வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிவில் சட்டங்கள் தனித்தனியாக உள்ளன. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது பா.ஜ., தலைமையிலான அரசின் நோக்கம். அந்த அடிப்படையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது மாநிலமாக பாஜ ஆளும் குஜராத்தில் அதற்கான முயற்சி தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர், பொதுவான சிவில் சட்டத்துக்கான தேவையை மதிப்பீடு செய்து, அதற்கான வரைவு மசோதாவை தயார் செய்வர்.குழுவின் அறிக்கை 45 நாட்களுக்குள் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் பொது சிவில் சட்டம் பற்றி மாநில அரசு முடிவு செய்யும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது, திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை தத்தெடுப்பு போன்ற விஷயங்களில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரே சீரான சட்ட நடைமுறைகள் இருப்பதை உறுதி செய்யும்.