ஆன்லைன் ரம்மி - tag ரூ.10 லட்சம் இழந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட வயலாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 25. சுங்குவார்சத்திரத்தில், உறவினர் வீட்டில் தங்கி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்துள்ளார்.
'ஆன்லைன் ரம்மி' விளையாடி வந்த தமிழ்செல்வன், 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வன், கடந்த 3ம் தேதி, இரவு 10:00 மணியளவில் திருவள்ளூர் - ஏகாட்டூர் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வாசுதேவன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
'வாட்ஸப் ஸ்டேட்டஸ்'
தற்கொலை செய்த தமிழ்செல்வன், மொபைல் போனில், 'வாட்ஸாப் ஸ்டேட்டஸ்-'ல் வைத்துள்ளார்.
அதில், 'எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் பண்ண தப்ப, நானே சரி பண்றேன். ஒரே ஒரு வேண்டுகோள், என்னை மாதிரி யாரும் ஆன்லைன் கேம் ஆடாதீங்க; 6 ஆண்டு கஷ்டப்பட்ட என்கிட்ட இப்போது ஒன்னும் இல்லாம போச்சு; அப்பா, அம்மாவுக்குக்கூட எதுவும் பண்ணலை' என, பதிவிட்டிருப்பதாக, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.