தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் வழக்கில் திருப்பம்
ராமநாதபுரம்:-போதைப்பொருட்கள் திருடி தலைமறைவாகி தப்பி வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் பிரதீப் குமார பண்டாரா மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் போலீஸ்காரர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இவ்வழக்கு பிப்.,18 க்கு தள்ளி வைக்கப்பட்டது.
இலங்கை கொழும்பு புறநகரான சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து 2020- ஆக., 26 -இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலின்படி அனுர குமார என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன் ஆவார்.
பிரதீப் குமார் பண்டாரா தான் இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருட்களை பணி நேரத்தில் திருடி சகோதரரிடம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர்.
இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர்.
இதையறிந்த அவர் பைபர் படகில் சட்ட விரோதமாக தமிழகம் தப்பி வந்தார். 2020 செப்., 4 மண்டபம் கடலோர காவல்படை போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.
சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார்.
இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பிரதீப் குமார் பண்டாரா ஆஜரானார்.
அவர் தன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டு மனு செய்தார். வழக்கை பிப்.18க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.