வண்டியூர் மக்களுக்கு வண்டி வண்டியாய் பிரச்னையாம்

மதுரை:பாதாளச் சாக்கடை திட்டம், மழை நீர் வடிகால் இல்லாமை, வண்டியூர் கண்மாய் பகுதி ஆக்கிரமிப்பு, குறுகலானதெருக்களில் தாறுமாறான ரோடுகள், பெயர்ந்து பரவிய கற்களால் வாகன போக்குவரத்து அவதி என வண்டியூர் மக்களுக்கு பிரச்னைகள் வண்டி வண்டியாய் நிரம்பியுள்ளது.

மதுரை மாநகராட்சி வார்டு 39 ல் வண்டியூர் மெயின்ரோடு பகுதி, யாகப்பாநகர், பாலாஜி நகர், திருவள்ளுவர் தெரு, அப்பாஸ் தெரு என பரந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு காலம் காலமாக நிறைவேறாத பிரச்னைகளால் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

ரேஷன் கடை வேண்டும்



பாண்டியன் தெரு ரவி: ரேஷன் கடை இல்லாததால் பொருட்கள் வாங்க வெகு தொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்குள்ள கூட்டத்தால் நீண்ட நேரம் காத்திருந்து நாள், நேரம் விரயமாகிறது. எனவே எங்கள் பகுதிக்கு ரேஷன் கடை தேவை. தெருவில் வடிகால் வசதி இல்லாததால்மழைநீர் வீணாகிறது. தேங்கும் மழைநீர் பல நாட்களுக்கு வடியாமல் தேங்கியதால், கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெரு விளக்குகள் வெளிச்சம் குறைவாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அச்சமுடன் நடமாடுகிறோம். திருவள்ளுவர் நகர், குறிஞ்சிதெரு பகுதியில் ரோடுகள் ஒழுங்கற்று உள்ளன. அம்ரூத் திட்டத்திற்காக பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் முடிந்து வெகு நாட்களாகியும் ரோட்டில் பேவர் பிளாக் கற்களை அமைக்கவில்லை. குறுகிய பகுதியில் மேடு பள்ளமாக இருப்பதால்வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

கண்மாய் ஆக்கிரமிப்பு அதிகம்



சிவசக்தி நகர் முத்துபாண்டி: வண்டியூர் கண்மாயில் கழிவு நீர், குப்பை நிரம்பியுள்ளது. நாற்பது அடியாக இருந்த கண்மாய் கரையை ஆக்கிரமித்து கட்டுமானங்களை ஏற்படுத்தியதால் கரை 15 அடியாக குறுகிவிட்டது. கண்மாயும் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. மேலமடைபகுதியில் பைப் லைன் சமீபத்தில் இந்தப் பகுதியில் இணைத்துள்ளதால் சீராக சென்ற ஓடை, தற்போது தடம்மாறி செல்கிறது. இதற்கு நிரந்தரதீர்வு கிடைக்க ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். எங்கள் பகுதியில் அங்கன்வாடி அமைக்க வேண்டும். தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.

அனைத்து திட்டங்களும் முடிந்தது



கவுன்சிலர் மாரநாடு கூறியதாவது: ரூ. 7 கோடி செலவில் 90 தெருக்களில் புதிதாக ரோடுகள் அமைத்துள்ளோம். அம்ரூத் திட்டத்தில் சில இடங்களில் கற்களை அகற்றி புதிதாகஅமைக்க நிதி கேட்டுள்ளோம். வெளிச்சம் குறைந்துள்ள பகுதியில் விரைவில் விளக்குகளை மாற்றுவோம். பாண்டி கோயில் பகுதியில் விட்டுச் செல்லும் நாய்கள் இப்பகுதியில்தஞ்சம் அடைகின்றன. முடிந்த அளவு தெருநாய் பிரச்னையை கட்டுப்படுத்தியுள்ளோம். கண்மாயை துார்வாரும் போது ஆக்கிரமிப்பு குறித்துவிசாரிக்க வலியுறுத்தியுள்ளேன்.

பாதாளச்சாக்கடை திட்டம் விரைவில் நடைமுறை படுத்தப்படும். ரேஷன் கடை, பொதுக் கழிவறை அமைக்க வலியுறுத்தி உள்ளேன். தெருக்களில் குறுகலானரோடுகளாக இருப்பதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது. எனவே மினி பஸ்சை அனுமதித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Advertisement