சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச திருவிழா துவக்கம்
காங்கேயம்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை, சுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த 2ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழாவுடன் நிகழ்சிகள் துவங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோயிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும், விநாயகர் வழிபாடும் நடைபெற்றது.
முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் 12:20 மணியளவில் மயில் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்கார்த்தில் சப்பாரத்தில் மலையை வலம் வந்த்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 1:00 மணிக்கு சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு காலசாந்தி திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெறும்.
தேரோட்டம் 11ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6:00 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது. 12,13ம், தேதிகளில் மலையை வலம் வந்து நிலை அடைகிறது. 16ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடைபெறுகிறது.
17ம் தேதி 10:00 மணிக்கு மஹாதரிசனம் நடைபெறுகிறது. 20ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.