நான்கு வழிச்சாலையில் விபரீத போக்குவரத்து

மதுரை; மதுரை ரிங்ரோட்டில் விரகனுார் சந்திப்பை தாண்டி ஒரே பகுதியில் எதிரெதிரே வாகனங்கள் செல்வதால் விபரீதம் நிகழ வாய்ப்பு உள்ளது.

சிவகங்கை ரோடு சந்திப்புக்கும், ராமநாதபுரம் ரோடு விரகனுார் சந்திப்புக்கும் இடையேதான் இந்த விபரீத போக்குவரத்து நடக்கிறது. சிவகங்கை ரோடு சந்திப்பில் இருந்து விரகனுார் சந்திப்புக்கு செல்லும் ரோட்டில் இடது புறமாக செல்லும் வாகனங்கள், மதுரை நகருக்குள் வண்டியூர், அண்ணாநகர் செல்ல வண்டியூர் விலக்கு வழியாக செல்கின்றன. இவ்வழியை அடுத்துள்ள வைகை கரையோர ரோடு மூலமும் இடையூறின்றி அப்பகுதிக்கு செல்லலாம்.

இந்த வைகை கரையோர ரோட்டுக்கு செல்ல, வண்டியூர் விலக்கை தாண்டியதும் 400 மீட்டர் தொலைவில் மீடியனில் இடைவெளி உள்ளது. இதில் ரோட்டின் வலதுபுறமாக திரும்பி மீண்டும் 400 மீட்டர் தொலைவுக்கு விதிமீறி எதிர்புறமாகவே செல்கின்றனர். போக்குவரத்து நிறைந்த, வாகனங்கள் விரையும் இந்த ரோட்டில் எந்நேரமும் விபத்து ஆபத்து உள்ளது.

இரவு நேரத்தில் வெளிச்சமே இல்லாத இப்பகுதியில் கூடுதல் ஆபத்து உள்ளது. இதில் சோகம் என்னவென்றால், டூவீலர்கள் மட்டுமின்றி, ஆட்டோ, கார்கள், ஏன் டவுன் பஸ்கள் கூட விபரீதம் தெரியாமல் செல்வதுதான்.

இந்த விதிமீறலுக்கு வாய்ப்பாக அப்பகுதி மீடியனில் உள்ள இடைவெளியை அடைத்துவிட்டு, வைகை நதியோரம் வடபகுதியில் இடைவெளி ஏற்படுத்தினால் விபத்து அபாயம் குறையும். தமிழ்நாடு சாலை கட்டமைப்பு போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement