பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: முள்ளோடையில் பரபரப்பு

பாகூர்; பாகூர் அருகே தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர் அருகே முள்ளோடையில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று மாலை இ-மெயில் வந்தது. அதில், பள்ளிக்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களை வரவழைத்து பள்ளி முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், தகவல் புரளி என்பது தெரிய வந்தது.

விசாரணையில், ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் என்பதும், அது தவறுதலாக அதே பெயரில் உள்ள புதுச்சேரியில் இயங்கும் பள்ளிக்கு வந்து இருக்கலாம் எனவும் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை கொண்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement