சென்னையில் கொடூரம்: ஆட்டோவில் பாலியல் தொல்லை; 2 பேர் கைது

17

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவரது காதலனான வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர், சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரை சந்திக்க, வட மாநிலத்தில் இருந்து சென்னை, கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு, அதிகாலை இளம்பெண் வந்துள்ளார். அப்போது, எங்கு செல்வது எனத் தெரியாமல், பஸ் முனைய வளாகத்தில் சுற்றித் திரிந்து உள்ளார். இதை பார்வையிட்ட மர்ம நபர்கள் சிலர், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி, கடத்த முயன்றனர்.


அப்போது இளம்பெண் கூச்சலிட்டத்தை தொடர்ந்து, சாலையில் சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். உடனே போலீசார், சாலையில் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர். போலீசார் தங்களை பின்தொடர்ந்து வருவதை அறிந்த மர்ம நபர்கள், அப்பெண்ணை இறக்கி விட்டு தப்பிச் சென்றனர். இளம்பெண்ணை மீட்ட போலீசார், அரசு காப்பகத்தில் ஒப்படைத்து விசாரிக்கின்றனர்.

மேலும், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். இளம்பெண் கடத்தப்பட்ட இந்த சம்பவம், கிளம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement