தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு துரோகம் அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை:'ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், பயிர் கடனை ரத்து செய்யாமல், தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காக, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, ஏழை மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, எந்த கவலையும் இல்லாமல், தி.மு.க., அரசு உள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து, முதல்வரும், அமைச்சர்களும், ஆளுக்கொரு சதவீதத்தை கூறுகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., ஆட்சியில், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு என, மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்ததும், விவசாயக் கடன் தள்ளுபடிக்கு முதல் கையெழுத்து போடப்படும் என, ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று வரை, பயிர் கடனை ரத்து செய்யாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது தி.மு.க., அரசு. தி.மு.க.,வின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில், தி.மு.க., அடித்திருக்கிறது.

உடனடியாக, இதற்காக ஒரு குழு அமைத்து, சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க.,வின், கல்விக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி, நான்கு ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement