டாடா சோலார் நிறுவனத்தை திறந்து வைத்தார் முதல்வர்

திருநெல்வேலி:திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் தொழிற் பேட்டையில் ரூ.4400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் பவர் பேனல் தயாரிப்பு நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை 11:00 மணிக்கு விமானத்தில் துாத்துக்குடி வந்தடைந்தார். அங்கிருந்து காரில் திருநெல்வேலி வந்தார்.

திருநெல்வேலியில் ரோட்டில் நடந்துசென்று பொது மக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.

பின்னர் காரில் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டைக்கு சென்றார்.அங்கு டாடா நிறுவனம் ரூ.4400 கோடி முதலீட்டில் அமைத்துள்ள டாடா சோலார் மின் உற்பத்தி பேனல்களை தயாரிக்கும் நிறுவனத்தை திறந்து வைத்தார். இந்த நிறுவனத்தில் 3000க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிகின்றனர். இதில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பெண்கள். வாய் பேச இயலாதவர்களும் நுாற்றுக்கணக்கில் பணியாற்றுகின்றனர்.

மேடையில் ரத்தன் டாடாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகர் காணொலி வீடியோவில் பேசினார்.

முன்னதாக டாடா குழுமங்களின் செயல் தலைவர் பிரவீர் சின்ஹா வரவேற்றார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் டாடா சோலார் பவர் ஆலை முழுமையாக சுற்றிப் பார்த்தார். கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், புதிதாக விக்ரம் சோலார் பவர் நிறுவனம் ரூ 3125 கோடி மதிப்பில் துவங்க உள்ள சோலார் பவர் பேனல் தயாரிப்பு நிறுவனத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரோடு ஷோ



மாலையில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து மார்க்கெட் செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்களை சந்திக்கும் ரோடு ஷோவில் பங்கேற்றார். மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட், நயினார் குளம் பூங்கா உள்ளிட்ட ரூ 66 கோடி மதிப்பிலான முடிந்த பணிகளை திறந்து வைத்தார். மாலை நேருஜி அரங்கில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

Advertisement