ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம், புத்துார், நகரி, திருப்பதி, நெல்லுார் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு, 35 பேருந்துகளும், ஊத்துக்கோட்டை - செங்குன்றம் மார்க்கத்தில், ஆறு மாநகர பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் என மொத்தம், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த வாகனங்கள் சென்று வருவதற்கு இடப்பற்றாக்குறை உள்ள நிலையில், மினி வேன், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ளன.

இதனால் ஏற்கனவே இடப்பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பால், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று திருப்புவதற்கு வாகன ஓட்டிகள் கஷ்டப்படுகின்றனர்.

இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதுகுறித்து புகார்கள் வந்துள்ள நிலையில், ஊத்துக்கோட்டை காவல் நிலையம், திருவள்ளூர் போக்குவரத்துத் துறை அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளன' என்றார்.

Advertisement