சிறுவனுக்கு பாலியல் தொல்லை துணை நடிகருக்கு 'போக்சோ'

சென்னை:மதுரவாயலைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனின் பெற்றோர், விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

அதில், பள்ளி விடுமுறை நாளில், ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு, தன் மகன் விளையாட சென்றதாகவும், அங்கே இருந்த இளைஞர் ஒருவர், தன் மகனை தனியாக அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரி, 21, என தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் ஹரியை கைது செய்து விசாரித்தனர். அதில், பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை அழைத்துச் சென்ற ஹரி, தான் சினிமா துறையில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது மொபைல் போனில் உள்ள சமூக வலைதள பக்கத்தில், பல்வேறு நடிகர்களுடன் பழக்கம் இருப்பதாக கூறி புகைப்படங்களை காண்பித்து, அவர்களை நேரில் பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.பின், சிறுவனை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், ஹரி சினிமா துறையில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்து வருவது தெரியவந்தது. மேலும், பூங்காவிற்கு வரும் சிறுவர்களை, இது போன்ற சினிமா பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காண்பித்து, பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஹரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement