'பிட்காயின்' முறைகேடு வழக்கு எஸ்.ஐ.டி.,யில் முகமது நலபட் ஆஜர்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848991.jpg?width=1000&height=625)
பெங்களூரு: 'பிட்காயின்' முறைகேடு வழக்கில், கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு நேற்று ஆஜரானார்.
பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா, 29. கடந்த 2020ல் ஹைட்ரோ கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பல அரசு துறைகளின் இணையதளங்களை முடக்கி பணம் சம்பாதித்து, அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுத்தியது தெரிந்தது.
மேலும், தனியார் நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கி பிட்காயின்களை திருடியதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 9 கோடி ரூபாய் மதிப்பிலான 31 பிட்காயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் அதிகாரிகள் சிலர், ஸ்ரீகிருஷ்ணாவை பயன்படுத்தி, பிட்காயின்களில் இருக்கும் பணத்தை தங்கள் பெயருக்கு மாற்றியதும் தெரிந்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். பிட்காயின் முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு காங்கிரஸ் அரசு ஒப்படைத்தது.
இந்நிலையில் கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட்டிற்கும், ஸ்ரீகிருஷ்ணாவுக்கும் இடையில் நிதி விவகாரத்தில் தொடர்பு இருந்தது விசாரணை குழுவுக்கு தெரியவந்தது.
இதனால், பிப்ரவரி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, முகமது நலபட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு நாளுக்கு முன்பே, முகமது நலபட் நேற்றே விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், டி.எஸ்.பி., பால்ராஜ் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பின், முகமது நலபட் அளித்த பேட்டி:
பிப்ரவரி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, எனக்கு சம்மன் வந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால், இன்று (நேற்று) ஆஜராகி உள்ளேன். நான் எங்கும் ஓடி போகவில்லை. கைது செய்யப்படுவோம் என்ற பயமும் இல்லை. ஸ்ரீகிருஷ்ணா பற்றி என்னிடம் விசாரித்தனர். எனக்கு தெரிந்ததை கூறினேன்.
எனது சகோதரர் மூலம், ஸ்ரீகிருஷ்ணா எனக்கு அறிமுகம் ஆனார். அவருக்கும், எனக்கும் இடையில் எந்த நிதி பரிமாற்றமும் இல்லை. சட்டத்தின் மீது மரியாதை உள்ளது. விசாரணையை சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட், சாந்தி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸின் மகன் ஆவார்.