மலையாள திரையுலகினர் ஸ்டிரைக் அறிவிப்பு

6

திருவனந்தபுரம்: நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தியும், கேளிக்கை வரி உயர்வைக் கண்டித்தும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள திரைப்பட சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.



இது தொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.சுரேஷ் குமார் கூறியதாவது: கேளிக்கை வரியை மாநில அரசு இரட்டிப்பு செய்தது, சினிமா டிக்கெட்டுக்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதித்தது உள்ளிட்ட காரணங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளது.


வரி குறைப்பு தொடர்பாக கேரள அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஜூன் 1ம் தேதி சூட்டிங்கை ரத்து செய்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.


அதேபோல, நடிகர்கள் அதிக சம்பளம் கேட்கின்றனர். இது திரையுலகை பெரிதும் பாதிக்கிறது. ஒரு படத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில், 60 சதவீதம் நடிகருக்கே கொடுக்க வேண்டியதாக உள்ளது. ஜனவரியில் மட்டும் கேரள சினிமாவுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 28 படங்கள் வெளியான நிலையில், ரேகாசித்ரம் படம் மட்டுமே வசூலை குவித்துள்ளது.


தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளை நிராகரிக்கும் நடிகர்கள் தயாரிக்கும் படங்களை வெளியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம். தேவைப்பட்டால், அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் விபரங்களையும் வெளியிடுவோம். மேலும், தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனை மீண்டும் ஒருமுறை சந்தித்து பேசுவோம், எனக் கூறினார்.

Advertisement