மூணாறில் 'டபுள் டெக்கர்' பஸ்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849540.jpg?width=1000&height=625)
மூணாறு: மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தபடி ரசிக்கும் வகையில் கண்ணாடி இழையால் வடிவமைக்கப்பட்ட, 'டபுள் டெக்கர்' பஸ் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், 'நகர் காட்சிகள்' என்ற பெயரில் அம்மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் துவங்கப்பட்ட, 'டபுள் டெக்கர்' பஸ் சர்வீஸ் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அதுபோன்று மூணாறில், 'டபுள் டெக்கர்' பஸ் சேவை துவக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, கடந்த ஏப்ரலில் சோதனை ஓட்டம் நடந்தது.
சுற்றுலா பயணியர் பஸ்சில் பயணித்தபடி இயற்கை எழிலை ரசிப்பதற்கு ஏற்ப, 'கேரள அரசு போக்குவரத்து கழகம் ராயல் வியூ' திட்டத்தில் சுற்றிலும் கண்ணாடி இழை கொண்டு, 'டபுள் டெக்கர்' பஸ் வடிவமைக்கப்பட்டது.
இதன் கீழ் தளத்தில் 12 பேர், மேல் தளத்தில் 38 பேர் என, 50 பேர் பயணிக்கலாம். இந்த பஸ் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. பஸ் இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அது விதிமுறை மீறல் என கேரள உயர் நீதிமன்றம் கண்டித்ததால், வண்ண விளக்குகள் ஒளிர விடுவது தவிர்க்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
![J.V. Iyer J.V. Iyer](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)