'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை; பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'


சென்னை: 'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' எனப்படும், போதைப் பொருள் விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மாநிலம் முழுதும் போலீசார், பள்ளி, கல்லுாரிகள் அருகேயுள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.


இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் தலைமையிலான கும்பல், தமிழகத்திற்கு, 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப்பொருளை வினியோகம் செய்து வருகிறது.


சமீபத்தில், சென்னையில் இந்த கும்பலை சேர்ந்த மூவர் கைதாகினர். அவர்களிடம், துப்பாக்கி மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தொடர் விசாரணையில், டில்லியில் இருந்து மெத் ஆம்பெட்டமைன் கடத்தி வரப்படுவது தெரியவந்துள்ளது.


தற்போது, இக்கும்பலை சேர்ந்தோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை குறிவைத்து, 'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' எனப்படும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக, மாநிலத்தின் பல பகுதிகளில், பள்ளி, கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில் நேற்று, சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் கூறியதாவது:



கடந்த, 2007ல், ஸ்ட்ராபெரி க்விக் மெத் போதைப்பொருள் புழக்கத்திற்கு வந்து விட்டது. இந்த போதைப்பொருளில், ஸ்ட்ராபெரி வாசம் வீசும். இளம் சிவப்பு நிறத்தில், பஞ்சு மிட்டாயில் பொம்மை செய்தால், எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இனிப்பு சுவையுடன் வாயில் போட்டவுடன், 'டப்' என வெடிக்கும்.


இந்த சத்தத்திற்காகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வாங்குவர். மெத் ஆம்பெட்டமைன் கலந்து இருப்பதால் போதை காரணமாக, அடிக்கடியும், அதிகமாகவும் வாங்க துாண்டும். இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலை தேடி வருகிறோம். தமிழகத்தில் இந்த போதைப்பொருளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement