கூலித் தொழிலாளியை தாக்கி கொல்ல முயன்ற வாலிபர் கைது
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே கூலித்தொழிலாளியை தாக்கி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், 45; கூலித் தொழிலாளி. கடந்த 1ம் தேதி இரவு 11:00 மணியளவில், கலித்திரம்பட்டு-வி.நெற்குணம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே தலையில் பலத்த காயத்துடன் சுய நினைவின்றி கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்ததாக வழக்குப் பதிந்தனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பச்சையப்பனை ஒருவர் தாக்கியது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கலித்திரம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பாரதிதாசன், 22; என்பவர், பச்சையப்பன் தன்னை கிண்டல் செய்ததால் தலையில் கல்லால் தாக்கியதாக தெரிவித்தார்.அதையடுத்து, கொலை முயற்சி வழக்காக மாற்றி, பாரதிதாசனை கைது செய்தனர்.