தள்ளாத வயதிலும் பொது சேவை செய்யும் 'தாத்தா'

படங்களில் வருவோர் மட்டும் ஹீரோ இல்லை. தன்னலம் கருதாமல், பொது வாழ்விற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கின்றனர்; அவர்கள் தான் ரியல் ஹீரோ. அப்படிப்பட்ட ஒரு ஹீரோவின் கதை தான் இது.

உடுப்பி, கார்காலா தாலுகாவில் உள்ள மார்னே கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசா முல்யா, 80. சிறுவயதில் இருந்தே, பொது சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு உள்ளார்.

இவரது கிராமத்தின் அருகில் உள்ள டோம்பராபல்கே எனும் கிராமத்திற்கு செல்வதற்கு ஒரே ஒரு பாதை தான் உள்ளது. அதுவும் மண்ணால் ஆன பாதை. இப்பாதையில் தான், ஊர் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையை ஒழுங்குபடுத்தவும் யாரும் முன்வரவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக புகார் அளித்தும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிந்தனை



இதை பார்த்த ஸ்ரீ முல்யா, தன் இளம் வயதிலேயே பிரச்னை குறித்து சிந்தித்து உள்ளார். அவரது மனதில் 'நாமே ஏன் இந்த சாலையை சரி செய்யக்கூடாது' என யோசித்து உள்ளார். யோசனைக்கு வடிவம் கொடுத்து, செயலாக மாற்றி உள்ளார்.

தன்னிடம் இருந்த கோடாரி, மண்வெட்டி, கடப்பாறையை கொண்டு இந்த பாதையை 1975 ல் சீரமைக்க துவங்கினார். அன்று துவங்கிய இப்பணியை இன்றும் செய்து வருகிறார். கடந்த 50 ஆண்டுகளாக பணியை செய்து வருகிறார். தனி ஆளாக பல கி.மீ., துாரம் சீரமைத்து உள்ளார்.

இந்த சாலையில் மழை காலங்களில் நிலைமை மோசமாக இருக்கும். இதை சரி செய்வதற்காகவே பல ஆண்டுகளுக்கு முன், ஒரு வடிகால் அமைத்து உள்ளார். ஆனால், அது காலப்போக்கில் அழிந்து உள்ளது.

லட்சியம்



இந்த பகுதியில் தார் சாலை வர வேண்டும் என்பது தான் இவரது வாழ்க்கை லட்சியமாக உள்ளது. என்.ஆர்.இ.ஜி.ஏ., எனும் திட்டத்தின் கீழ், 2024 - 2025 ம் ஆண்டில் கார்கலா தாலுகாவிற்கு 670 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் மார்னே கிராம பஞ்சாயத்துக்கு 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த பகுதியில் உள்ள சாலை சீர் செய்யவில்லை என்பது வருத்தத்தை அளிக்கும் விதமாக உள்ளது
- நமது நிருபர் -
.

Advertisement