; அரசு பள்ளியில் மாணவர்களை முட்டி போட வைத்து தண்டனை வீடியோ பரவலால் சர்ச்சை

2

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை முட்டி போட வைத்து தலைமை ஆசிரியர் தண்டனை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஆரோக்கியராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

ஆசிரியர்கள் ஈகோ மற்றும் ஜாதி ரீதியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஆசிரியர்களுக்கும்,தலைமை ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பெற்றோர்கள் சிலர் கூறியதாவது: கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 வருடத்திற்கு முன்பு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் கல்வித்திறன் பாதிக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்களும் ஒழுக்க கேடான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிலர் தவறு செய்ததையடுத்து அவர்களை தலைமையாசிரியர் முட்டி போட வைத்து தண்டனை கொடுத்தார். அதை ஆசிரியர்கள் சிலர் வீடியோ எடுத்து பரப்பி உள்ளனர். மாணவர்களை நல்வழிப்படுத்த இது போல் தண்டனை கொடுப்பது வழக்கமானது தான் என்றனர்.

தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் கூறியதாவது: பள்ளியில் படிப்பு மற்றும் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை நல்வழிப்படுத்தும் விதமாக முட்டி போடச் செய்தேன். இதை தவறாக சித்தரிக்க ஆசிரியர்கள் சிலர் முயற்சித்து வீடியோவை பரப்பி உள்ளனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement