உதிரும் இலைகளை உரமாக்க பெங்., மாநகராட்சி திட்டம்

பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூங்காக்களில், உதிரும் இலைகளை உரமாக்க மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.

துப்புரவு தொழிலாளர்கள், இலைகளை அள்ளாமல், ஓரிடத்தில் குவித்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சூழ்நிலை அசுத்தமடைகிறது.

தீ விபத்துகளுக்கும் காரணமாகலாம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நடை பயிற்சியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் குறையும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இலைகளை உரமாக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுஉள்ளது.

இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

குளிர்கால இறுதியில், இலைகள் உதிர்ந்தபடியே இருக்கும்.

பெங்களூரு திடக்கழிவு நிர்வகிப்பு லிமிடெட், மாநகராட்சி, கப்பன் பூங்கா மற்றும் தோட்டக்கலை துறை ஒருங்கிணைப்பில், 1,000க்கும் மேற்பட்ட பூங்காக்களில் உதிரும் இலைகளை உரமாக்க மாற்ற, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அனைத்து வார்டுகளிலும் உதிரும் இலைகள், அருகில் உள்ள பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்படும். இதற்காக ஆட்டோ டிப்பர்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

குறிப்பிட்ட பூங்காக்களில் உரம் தயாரிப்பு யூனிட் அமைக்கப்படும். அங்கு இலைகள் கொண்டு செல்லப்பட்டு உரமாக மாற்றப்படும்.

வீடு, கட்டடங்களில் உள்ள தோட்டங்களில் உலர்ந்த இலைகளை, பொது மக்கள் எரிக்க கூடாது.

துப்புரவு தொழிலாளர்கள், அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். சில இடங்களில் அரசு, மாநகராட்சி உதவி இல்லாமல், மக்களே இலைகளை உரமாக்குகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement