கல்வித்துறையை சீரழித்து விட்டனர்: மாஜி., முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரி; ஆம் ஆத்மி கட்சி - காங்., இண்டியா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகி இருப்பார் என, மாஜி., முதல்வர் நாராயணசாமி கூறினார்.

இதுகுறித்து புதுச்சேரி காங்., முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சி - காங்., இண்டியா கூட்டணியில் இணைந்து தேர்தலில் சந்தித்திருந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகி இருப்பார். அவரது நடவடிக்கையால் டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி வீழ்ந்துள்ளது. இது, இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு மிகப்பெரிய பாடமாகும்.

கூட்டணி கட்சி கள் விட்டுக்கொடுத்து பா.ஜ., வை வீழ்த்த இணைந்து பாடுபடவேண்டும். மத்தியில் காங்., ஆட்சி இருந்தபோது நமது மீனவர்களை இலங்கை நிர்வாகம் கைது செய்தால், 48 மணி நேரத்தில் மீட்கப்படுவர். அதற்காக ஆகும் செலவை மத்திய அரசு கொடுத்தது. தற்போது, மத்திய பா.ஜ., அரசு, மீனவர்கள் பற்றி கண்டுகொள்வதில்லை.

எனவே, வைத்திலிங்கம் எம்.பி.,யுடன் டில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து நமது மீனவர்களை விடுதலை செய்வது குறித்து அழுத்தம் தர உள்ளேன்.

முதல்வர் ரங்கசாமி டில்லி சென்று பிரதமரை சந்தித்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரையாவது அனுப்பி வைக்க வேண்டும்,

மத்திய பட்ஜெட்டில், புதுச்சேரி அரசுக்கு, 41 சதவீதம் மானியம் தரவேண்டும். ஆனால் 20 சதவீதம் தரப்படுகிறது.

புதுச்சேரியில் இருந்து ஜி.எஸ்.டி., பெற்று விட்டு, புதுச்சேரிக்கு தரவேண்டிய நிதியை தருவதில்லை. என்.ஆர்.காங்., பா.ஜ.க., கூட்டணி அரசை மோடி அரசு புறக்கணிக்கிறது.

புதியக் கல்விக்கொள்கையால் புதுச்சேரி மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் குறைந்த அளவே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி கல்வித்துறையை முதல்வர், கல்வித்துறை அமைச்சர் சீரழித்துவிட்டனர். இதற்கு அவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement