ஜூனியர்களுக்கு அதிக ஊதியம் சீனியர் எஸ்.ஐ.,க்கள் குமுறல்

தேனி:தமிழகத்தில், 1993ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள் பெறும் ஊதியத்தை விட, 1995ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 1,600 ரூபாய் கூடுதல் ஊதியம் பெறுவது, சீனியர்களுக்கு குமுறலை ஏற்படுத்திஉள்ளது.

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 1993ல் இரண்டாம் நிலை காவலர் பணியிடத்தில், 10,000 பேர் பணியில் சேர்ந்தனர்.

நடவடிக்கை இல்லை



பத்தாண்டுகள் பணி முடித்து, 2003ல் முதல் நிலை காவலராகினர்.

இவர்கள், 2008ல் தலைமை காவலர்களாகவும், 10 ஆண்டுகள் முடிந்து சிறப்பு எஸ்.ஐ.,க்களாகவும் பதவி உயர்வு பெற்றனர். இந்த சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு தற்போது அடிப்படை ஊதியமாக, 55,700 ரூபாய் கிடைக்கிறது.

ஆனால், 1995ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு, 2024 ஜூலையில் பதவி உயர்வு வழங்குவதற்கு பதிலாக ஏழு மாதங்கள் முன்பாக ஜனவரியில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.


இதில், 1993ல் பணியில் சேர்ந்து தற்போது சிறப்பு எஸ்.ஐ.,களாக உள்ளவர்களை விட இவர்கள், 1,600 ரூபாய் கூடுதலாக, 57,300 ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். இதை சரி செய்ய, 1993ல் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.,க்கள் குறைதீர் முகாம்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

அரசு சம்பளம்



அவர்கள் கூறுகையில், 'மாநிலம் முழுதும் 10,000 சிறப்பு எஸ்.ஐ.,கள் பாதிக்கப்பட்டுள்ளோம். 2026 ஜன., 1ல், 8வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு சம்பளம் வழங்க உள்ளது.

அந்த அகவிலைப்படி மாநிலத்திலும் உயரும். அப்போது, ஜூனியர்களுக்கு மேலும் சம்பள உயர்வு கிடைக்கும். சீனியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவோம். பிரச்னையை சரி செய்ய டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement