விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்க முகாம்களில் தகவல் சேகரிப்பு

கம்பம் : விவசாயிகளின் முழு விபரங்களை சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியை, கிராம திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களிடம் ( CRS ) வழங்கி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் விபரங்கள் தற்போது பார்மர்ஸ் ரிஜிஸ்ட்ரி ( Farmers Registry ) என்ற செயலியில் ,மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் நில விபரங்களையும் பதிவேற்றம் செய்து , ஒவ்வொரு விவசாயிக்கும் ஆதார் எண் போன்று பிரத்யேக எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கென மாநில வேளாண் ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் விபரங்களை பெற சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கிறது.

இப் பணிகளில் வேளாண் அலுவலர்களுக்கு உதவ ஊராட்சிகளில் உள்ள திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இவர்கள் விவசாயிகளின் விபரங்களை சேகரித்து உதவி வேளாண் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

இதற்கென வேளாண் இயக்குநரகம் விவசாயிகளின் பதிவகம் என்ற செயலியை அறிமுகம் செய்து அதில் விபரங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால் பதிவேற்றம் செய்ய வேண்டிய செயலி தொழில்நுட்ப கோளாறுகளால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என கூறப்பட்டது. தற்போது சில நாட்களுக்கு முன் செயலி பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில், 'கடந்த வாரம் செயலி பதிவிறக்கம் செய்தோம். தற்போது திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் தகவல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது என்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆதார் எண் போன்று ஒரு பிரத்யேக எண் அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.

விவசாயிகள் வங்கி கடன்கள், அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் போன்றவைகள் பெறுவதற்கு இந்த எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம்' என்றனர்.

Advertisement