மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'
காரைக்கால்:துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, இன்று முதல் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த ஆனந்தவேல் என்பவரின் விசைப்படகில், கிளிஞ்சல்மேடு மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேர், ஜன., 26ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அந்த படகு மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், மூன்று மீனவர்கள் காயமடைந்தனர்.
காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராம மீனவர்கள் ஆலோசனை கூட்டம், மீன்பிடி துறைமுகத்தில், மீனவ பஞ்சாயத்து தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடந்தது.
இதில், மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி, கைது செய்ததை கண்டித்தும், காயமடைந்து, இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை, மேல் சிகிச்சைக்காக விடுவிக்கவும், படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல், காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வது என, முடிவு செய்தனர்.
சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வரும் 14ம் தேதி நாகை, மயிலாடுதுறை மீனவர்களை ஆதரவுடன், மறியல் போராட்டம் நடத்தப்படும் என, மீனவர்கள் அறிவித்துள்ளனர்.