வடலுார் அய்யன் ஏரி புனரமைப்பு பணி அமைச்சர் அடிக்கல் நாட்டல்

கடலுார், : வடலுார் அய்யன் ஏரியை துார்வாரும் பணிக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

வடலுார் நகராட்சி அய்யன் ஏரியை கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் 15வது மத்திய நிதிக்குழு திட்டங்களின் கீழ், 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரி புனரமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர் பன்னீர்செல்வம் ஏரி புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின், பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் 51 லட்சம் ரூபாய் மதிப்பில் அயன் குறிஞ்சிப்பாடி தாழை ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்தார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் அரசு நலத் திட்டங்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறார்.

வடலுார் நகராட்சியில் சாலை மற்றும் குளம் புனரமைப்பு பணி, பள்ளிகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துதல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட 34 பணிகள் முடிந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய கழிவறை, மழைநீர் வடிகால் அமைத்தல் உட்பட 27 பணிகள் நடந்து வருகிறது. வடலுார் அருகே உள்ள அய்யன் ஏரி, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது' என்றார்.

விழாவில், வடலுார் சேர்மன் சிவக்குமார், துணைத் தலைவர் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணைத் தலைவர் ராமர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடேசன், கமிஷனர் ரஞ்சிதா, செயல் அலுவலர் பாலமுருகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement