நெல் விற்ற பணம் கடனுக்கு பிடித்தம் வங்கிகளால் விவசாயிகள் அதிர்ச்சி
தஞ்சாவூர்:விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நெல் விற்ற பணத்தை, அவர்கள் வாங்கிய கடனுக்கு வங்கிகள் பிடித்தம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், 3.25 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் பயிரிடப்பட்டு இருந்தது.
தற்போது, அறுவடை பணி தீவிரமாக நடக்கிறது. மாவட்டத்தின், 526 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் நடக்கிறது.
இதற்கான தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அப்படி வரவு வைக்கப் படும் தொகையை, விவசாயிகளின் பெயரில் உள்ள கடனுக்கு, வங்கிகள் தானாக பிடித்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
கடந்த நவம்பர், டிசம்பரில் பெய்த தொடர் மழையால், நெற்பயிர்களில், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு சராசரியாக, 35 மூட்டை மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், 24 மூட்டைதான் கிடைத்துள்ளது. இந்தாண்டு அறுவடை இயந்திரம் வாடகை, உரம் போன்றவற்றின் விலை உயர்ந்து விட்டது.
இச்சூழலில், விவசாயிகள் நெல் விற்ற பணத்தில், பல்வேறு கடன்களை அடைக்க வேண்டி இருக்கும். ஆனால், வங்கி நிர்வாகங்கள் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், நெல் கொள்முதல் பணத்தை விவசாயிகளின் கடனுக்கு வரவு வைப்பது அதிர்ச்சியாக உள்ளது.
வங்கிகளின் நடவடிக்கை குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.