நேரத்தை வீணடிக்க கூடாது மின் வாரிய தலைவர் அறிவுரை

சென்னை,:'நேரத்தை வீணடிக்காமல், கோடை காலத்தில் தடையின்றி மின் வினியோகம் செய்வதை, உறுதி செய்வதற்கான பணிகளை, முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்' என, பொறியாளர்களுக்கு, மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக மின் வாரியத் தலைவராக ராதாகிருஷ்ணன், பிப். 10ம் தேதி பொறுப்பேற்றார். இவர், மின் வினியோகம் தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில், அவர் பேசியது குறித்து, பொறியாளர் ஒருவர் கூறியதாவது:

கூட்டத்தில் வாரிய தலைவர், 'அனைவரும் நேரத்தை வீணடிக்காமல், பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும்; கோடையில் தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்ய, திட்டமிட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை, முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்; சென்னையில் கிண்டி உள்ளிட்ட இடங்களில் புதிதாக அமைக்கப்படும், துணைமின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.

மேலும், 'ஒவ்வொருவரும், பணியில் தாமதத்திற்கு காரணம் கூறாமல், அதை விரைந்து முடிப்பதற்கான பதில்களை தெரிவிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement