ஈரோட்டில் இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு பிப்.15ல் துவக்கம்

ஈரோடு:ஈரோடு, டெக்ஸ்வேலியில் வரும், 15, 16ல் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் சார்பில், 'இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு' நடக்க உள்ளது.

இது குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் நம்மாழ்வார் மக்கள் குழு வெற்றிமாறன், ஐந்துணை வேலுசாமி, சுடர் நடராஜன் ஆகியோர் கூறியதாவது:

இயற்கை விவசாய உற்பத்தி, அவற்றை சந்தைப்படுத்துதல், இது தொடர்பான பிரச்னையை அரசிடம் எடுத்து செல்ல சரியான கூட்டமைப்பு இல்லை. பல முன்னோடி இயற்கை விவசாயிகள் பிரிந்து இருப்பதால், அவர்களை இணைத்து கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி இம்மாநாடு நடக்கிறது.

சென்னை, திருச்சி, டெல்டா மாவட்டம், திருநெல்வேலி பகுதி என பல இடங்களில், 1,000 இயற்கை விவசாயிகளிடம், 50 கோரிக்கைகளை பெற்றோம். அவற்றுக்கு வடிவம் கொடுத்து மாநாடு மூலம் மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்துவோம். வரும், 15, 16ல் நடக்கும் மாநாட்டில் விதைகள் காட்சிப்படுத்துதல், காய், கனி, கிழங்கு, பருத்தி, பனைப்பயிர், அவற்றின் மதிப்பு கூட்டிய பொருட்களை காட்சிப்படுத்துகிறோம்.

உணவு உற்பத்தி, சூழல், விற்பனை, சந்திக்கும் பிரச்னைகள் பற்றி பேசுகிறோம். உழவர் சந்தையில் இயற்கை விவசாயத்துக்கு ஒரு இடம் வழங்குதல், மதிப்பு கூட்டிய பொருட்களை சந்தைப்படுத்த வசதி செய்தல், இயற்கை விவசாயம் சார்ந்தவைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் என பலவற்றை வலியுறுத்துகிறோம். மாநில அளவில் பல இயற்கை விவசாயிகள், அமைப்புகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு கூறினார்,

ஆர்வலர்கள் சிவகுமரன், ஹீமாகிரன், விஷ்ணுபிரியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement