தமிழக மக்கள் புத்திசாலிகள்: கவர்னர் ரவி

16


சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் நினைப்பதை விட தமிழக மக்கள் புத்திசாலிகள்,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.


முதல்வர் ஸ்டாலின், இன்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான தலையங்கத்தை வைத்து கவர்னரை விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.
'இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்கள் மீண்டும் மீண்டும் கண்டனம் தெரிவித்தும், கவர்னரோ அல்லது பா.ஜ.,வோ எதையும் கற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் அரசியலமைப்புக்கு எதிரான செயல்களை ஒழுங்குப்படுத்துவதற்கு பதிலாக, அரசியல் பகையை தீர்த்துக் கொள்வதற்கு மத்திய அரசு, இத்தகைய அத்துமீறல்களுக்கு அனுமதி அளிக்கிறது. பா.ஜ., ஆட்சியில் கூட்டாட்சி ஆபத்தில் உள்ளது' எனக்கூறியிருந்தார்.


இந்நிலையில், கவர்னர் மாளிகை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
சுப்ரீம் கோர்ட் முன் விசாரணையில் உள்ள ஒரு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளிதழ் கொண்ட பார்வையின் போர்வையில், இன்று தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் கவர்னருக்கு எதிராக தமிழக மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.


நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள்.


இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதல்வர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை மதிக்காமல், மிகவும் தரம் தாழ்ந்து போயுள்ளார்.

தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் அதை பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது. தமிழக மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement