பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்

கராச்சி: பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிதி, சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2) அணிகள் பைனலுக்கு (பிப். 14, கராச்சி) முன்னேறின. தென் ஆப்ரிக்கா (0) வெளியேறியது.

கராச்சியில் நடந்த கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி (355/4, 49 ஓவர்) 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை (352/5, 50 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியின் 28வது ஓவரில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி, ரன் எடுக்க ஓடிய தென் ஆப்ரிக்காவின் மாத்யூ பிரீட்ஸ்கே மீது மோதினார். இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
எதிரணி வீரர் மீது வேண்டுமென்றே மோதிய ஷாகீன் அப்ரிதிக்கு, ஐ.சி.சி., 2.12 விதிமுறைப்படி போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம், ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.
தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா 'ரன்-அவுட்' ஆன போது, பாகிஸ்தானின் சவுத் ஷகீல், கம்ரான் குலாம், பவுமாவின் அருகில் சென்று மகிழ்ச்சியை கொண்டாடினர். எதிரணி வீரரை கேலி செய்த ஷகீல், கம்ரான் குலாமிற்கு, ஐ.சி.சி., 2.5 விதிமுறைப்படி போட்டி சம்பளத்தில் இருந்து தலா 10 சதவீதம் அபராதம், தலா ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.

Advertisement