டெண்டர் பணிகளில் ஊடுருவும் ஆந்திரா முதல்வருக்கு முனிரத்னா பரபரப்பு கடிதம்

பெங்களூரு: பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, முதல்வர் சித்தராமையாவுக்குஎழுதியுள்ள கடிதம்:
பெங்களூருக்கு திறமையான, நேர்மையான பொறுப்பு அமைச்சரை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெங்களூரு மீது முதல்வருக்கு உண்மையான அக்கறை இருந்தால், அமைச்சர்கள் கிருஷ்ண பைரே கவுடா, ஜார்ஜ், ராமலிங்கரெட்டி ஆகியோரில் ஒருவரை நியமிக்க வேண்டும்.
புதிய தலைவர்
ஒருவேளை இவர்களுக்கு பதிலாக, வேறு யாரையாவது நியமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினேஷ் குண்டுராவ் அல்லது கிருஷ்ணப்பாவை நியமியுங்கள்.
ஆந்திர முதல்வரின் ஆதரவாளர்கள் மற்றும் சில செல்வாக்கு மிக்க ஒப்பந்ததாரர்கள், நமது கர்நாடக ஒப்பந்ததாரர்கள் மீது சவாரி செய்யவந்துள்ளனர். பெங்களூரு வளர்ச்சி பணிகளின் டெண்டர் பெற, ஏற்கனவே 12 சதவீதம் கமிஷன் அளித்துள்ளனர். பணி உத்தரவு கடிதம் கிடைத்த பின், மீதி தொகையை தருவர். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில், 'டீல்' பேசி முடித்துள்ளனர்.
பெங்களூருக்குநிதியுதவி வழங்கும் முன், நகரின் அனைத்துஎம்.எல்.ஏ.,க்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்த வேண்டும். அந்த கூட்டத்திலேயே அந்தந்த தொகுதிகளுக்கு, நேரடியாக நிதியுதவியை அறிவிக்க வேண்டும்.
20 ஆண்டுகள்
கடந்த 2013 முதல் 2018 வரை, நீங்கள் முதல்வராக இருந்த போது, பெங்களூரு 10 முதல் 20 ஆண்டுகள் முன்னோக்கி சென்று, ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளினோம். தற்போது வெறும் இரண்டு ஆண்டுகளில், பெங்களூரு 20 ஆண்டு பின்னுக்கு சென்றுவிட்டது. ஹைதராபாத் நம்மை விட முன்னணியில் உள்ளது.
உங்களுக்கு (முதல்வர்) பெங்களூரின் மீது அக்கறை இருந்தால், மாவட்ட பொறுப்பு அமைச்சரை மாற்றுங்கள். அப்போதுதான் களங்கத்தை நீக்க முடியும். தற்போது ஊழல் தாண்டவமாடுகிறது. மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, இடைத்தரகர்கள் போன்று வாழ்கின்றனர்.
கமிஷன் தொகையை வசூலிக்க, ஏஜென்டுகளை நியமித்துள்ளனர். நிதியுதவி தவறாக பயன்படுத்தினால், கரும்புள்ளி ஏற்படும். உங்களை போன்ற நேர்மையான முதல்வரின் ஆட்சிக்கு, களங்கம் ஏற்பட கூடாது.
நான், உங்களுக்குகடிதம் எழுதியதால், என் மீது, தலித் அடக்கு முறை, பாலியல் பலாத்காரம், போக்சோ உட்பட பல பொய்யான வழக்குகள் பதிவாகலாம்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.