2ம் நிலை நகரம் மீதும் கவனம் துணை முதல்வர் விருப்பம் 

பெங்களூரு: ''முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை நகரம் மீது கவனம் செலுத்த வேண்டும்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று, துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

எங்கள் தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில், புதிய தொழில் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. அதனால் தான் முதலீட்டாளர்களுக்காக பல திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. முதலீட்டாளர்கள் பெங்களூரில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம்.

இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். நஞ்சுண்டப்பா அறிக்கை அடிப்படையில், பின்தங்கிய தாலுகாக்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மூலதனத்தை முதலீடு செய்ய பல ஊக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக தாலுகா மட்டத்தில் தொழில்துறை பகுதியை உருவாக்கும் நோக்கம் உள்ளது.

இங்கு உள்ள அனைவரும், எங்கள் மாநிலத்தின் சொத்து. நீங்கள் பலமாக இருந்தால், நாமும் பலமாக இருப்போம் என அரசு நம்புகிறது.

நமது மாநிலத்திற்கு வரலாறு உண்டு. சுதந்திரத்திற்கு முன்பே 1904ல் சிவனசமுத்திராவில் நீர்மின் நிலையம் கட்டப்பட்டது. அங்கிருந்து பெங்களூருக்கு மின்சாரம் எடுக்கப்பட்டது.

விண்வெளி திட்டம் முதன்முதலில் பீன்யா தொழிற்பேட்டையில் தான் உருவாக்கப்பட்டது.

நான் மின்சார அமைச்சராக இருந்த போது, மாநிலம் மின் உற்பத்தியில் தன்னிறவு அடைந்தது. எரிவாயு மூலம் இயங்கும், எரிசக்தி உற்பத்தி மையம் துவங்கப்பட்டது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன. பெங்களூரு வழியாக கர்நாடகாவை உலகமே திரும்பி பார்க்கிறது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். மெட்ரோ விரிவாக்கம், ஈரடுக்கு மேம்பால திட்டங்களை வகுத்து உள்ளோம். எதிர்காலத்தில் அனைத்து மெட்ரோ பாதைகளும் ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றப்படும்.

சாலைகளை அகலப்படுத்த நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளதால் சுரங்க பாதை அமைக்க முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement