மரத்தில் அரசு பஸ் மோதி 20 பயணியர் படுகாயம்

மாண்டியா: மாண்டியா மாவட்டம்,ஆலேனஹள்ளியில் இருந்து, நேற்று காலை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், கிருஷ்ணராஜ் பேட்டுக்கு 30க்கும் மேற்பட்டபயணியருடன் சென்றுகொண்டிருந்தது.

குந்தஹள்ளி அருகே வரும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பஸ்சில் இருந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பயணியரில் பெரும்பாலானோருக்கு கை, கால்கள் முறிவு என ௨௦க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதியினர், கிருஷ்ணராஜ்பேட் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலை, கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர்கள் மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக, தன் எக்ஸ் பதிவில் மத்திய அமைச்சரும், மாண்டியா எம்.பி.,யுமான குமாரசாமி குறிப்பிடுகையில், 'மாவட்ட மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு, விபத்தில் காயமடைந்தோருக்கு இலவசமாகவும், தரமான சிகிச்சை அளிக்கவும் கூறியுள்ளேன்' என்றார்.

Advertisement