தொடர்கிறது 'இன்ப்ளுயன்ஸா' தொற்று: குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம்

1

சென்னை: 'தமிழகத்தில், இன்ப்ளுயன்ஸா தொற்று அதிகரித்து வருவதால், குழந்தைகள், முதியோர், இணை நோயாளிகள், கர்ப்பிணியர் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


வழக்கமாக மழை காலங்களில், 'ப்ளூ' வைரஸ்களால், 'இன்ப்ளுயன்ஸா' காய்ச்சல் அதிகரிக்கும். இருமல், தொண்டை ஒவ்வாமை, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.


இவ்வகை காய்ச்சல், பலருக்கு மிதமானதாக இருக்கும். ஒரு சிலருக்கு, நேரடியாக நுரையீரலை தாக்கி, பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், அலட்சியம் காட்டாமல், டாக்டரிடம் சிகிச்சை பெறுவது அவசியம்.


இந்த இன்ப்ளுயன்ஸா காய்ச்சல், ஜனவரி மாதங்களில் ஓரளவுக்கு கட்டுக்குள் வரக்கூடியது. ஆனால், பருவ நிலை மாற்றத்தால், ஜனவரி மாதம் முடிந்தும், இன்ப்ளுயன்ஸா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனவே, இந்த தொற்றை தடுத்தல், சிகிச்சை அளித்தல் குறித்து, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழகத்தில், ஆர்.எஸ்.வி., என்ற சுவாசப்பாதை தொற்று மற்றும் இன்ப்ளுயன்ஸா தொற்று பரவி வருகிறது. பாதிப்புகளுடன் வருவோருக்கு அலட்சியம் காட்டாமல், இன்ப்ளுயன்ஸா பரிசோதனை செய்ய வேண்டும்.


அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தை பொறுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக, முதியோர், கர்ப்பிணியர், இணை நோயாளிகள், ஆறு மாதம் முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 'இன்ப்ளுயன்ஸா' தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.


நோயின் தீவிரத்தை பார்த்து, 'ஓசல்டாமிவிர்' என்ற தடுப்பு மருந்து வழங்கலாம். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துதல் அவசியம். அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிதல் அவசியம்.


முகம், கண்கள், மூக்கு பகுதியை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும். இடைவெளி விட்டு பேசுவதும், இருமும் போதும் கைக்குட்டை பயன்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement